bluehost

Saturday, April 24, 2021

உணவு


என்னுடைய நண்பர் ஒருவர், மற்றவர்கள் வீட்டில் உணவு உண்ண மாட்டார். "மற்றவர்கள் வீட்டில் சாப்பிட்டால் அவர்களின் குணம் எனக்கு வந்து விடும். கெட்டவர்களின் உணவை உண்டால் கெட்ட குணம் வந்துவிடும்" என்பார். (எங்களைப் போன்ற நல்லவர்களின் வீட்டில் உணவு உண்டால் உனக்கு நல்ல குணம் வருமே என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்). அதற்கு வியாக்கியமாக மகாபாரதத்தில் இருந்து ஒரு கதை சொல்வார்.


பீஷ்மர் அர்ஜுனன் தொடுத்த அம்புகளால், உடல்முழுதும் தைக்கப்பட்டு அம்பு படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் விரும்பிய நேரத்தில் தான் உயிர் பிரியவேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தார். அதனால் உத்தராயண காலத்திற்காக காத்திருக்கிறார். அப்போது உயிர் துறந்தால் புண்ணியம். (சூரியன் ஆறு மாத காலம் தெற்கு நோக்கி நகரும். அது தட்சிணாயனம். அடுத்த ஆறு மாதம் வடக்கு நோக்கி நகரும். அது உத்தராயணம். தைமாதம் முதல் உத்தராயணம் ஆரம்பம் ஆகும்). பாண்டவர்கள் பீஷ்மரைக் காண வருகின்றனர். அவர்களுடன் திரெளபதியும் வருகிறாள். அவர்கள் பீஷ்மரை வணங்கி அறிவுரை சொல்ல வேண்டுகின்றனர். அவரும் மிக உன்னதமான தர்மநெறிகளை அவர்களுக்கு போதிக்கிறார். அப்போது இடையில் திரௌபதி "க்ளுக்" என்று சிரித்துவிடுகிறாள். எல்லோரும் அவளை சினத்துடன் பார்க்கின்றனர். பீஷ்மர் அவளிடம் காரணம் கேட்கிறார்.  "ஒன்றும் இல்லை. நான் முட்டாள்தனமாக சிரித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்கிறார். ஆனால் பீஷ்மர் "நீ முட்டாள் கிடையாது. புத்திசாலித்தனமான பெண். உண்மையான காரணத்தை சொல்" என்று கேட்கிறார்.


அதற்கு திரௌபதி "சபையில் துச்சாதனன் என்னை துகிலுறித்தபோது நீங்கள் ஏன் இந்த நியாயங்களை பேசவில்லை? மௌனமாக சிலைப் போன்று அமர்ந்திருந்தீர்கள்" எனக் கேட்கிறாள். பீஷ்மர் கடும் மனவேதனை அடைகிறார். பிறகு "நான் அப்பொழுது துரியோதனன் இட்ட உணவை உண்டு கொண்டிருந்தேன். என் ரத்தம் முழுதும் அவனின் கெட்ட குணம் நிரம்பி இருந்தது. அதனால்தான் அப்பொழுது நான் வாய் மூடியிருந்தேன். இப்போது அர்ஜுனன் விட்டு அம்பினால் அந்த கெட்ட இரத்தம் முழுவதும் என் உடலை விட்டு வெளியேறி விட்டது. அதனால்தான் நியாய தர்மங்களை தற்போது பேசுகிறேன்" என்கிறார்.


இந்தக் கதையை அந்த நண்பர் மேற்கோள் காட்டுவார். ஆனால் எனக்கு ஒரு ஐயம்? ரமண மகரிஷி போன்ற யோகிகள் நான்கைந்து வீடுகளில் பிச்சை எடுத்துதானே உண்டனர். அவர்களின் குணம் கெட்டுவிட்டதா?


ஒருவரின் வீட்டில் உண்ண மறுப்பது அவரை இழிவுபடுத்தும், நிராகரிக்கும் செயலாகும். சைவ உணவு பழக்கம் கொண்டவன் நான். ஆனால் அதை நண்பர்களின் வீடுகளில் கறாராக பின்பற்ற மாட்டேன். அவர்கள் அன்புடன் எது தந்தாலும் சாப்பிடுவேன். வேண்டாம் என்று மறுத்தால் அது ஒரு பிரிவினையை உண்டாக்கிவிடும். மோர் ஊற்றிய நீர் சாதம், கேழ்வரகு கூழ் முதல் அட்டகாசமான விருந்து சாப்பாடு வரை நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். அதேசமயம் அன்பும், மரியாதையும் இல்லாமல் அழைக்கப்பட்ட பெரும் விருந்துகளை புறக்கணித்து இருக்கிறேன். அன்பில்லாமல் பரிமாறப்படும் உணவு விஷம். 


2003ஆம் ஆண்டு. அப்போது நான் அவிநாசியில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு முறை அலுவலக வேலையாக சேலம் போய்விட்டு அவிநாசி திரும்பும்பொழுது எதிர்பாராதவிதமாக இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. உணவு உட்கொள்ளவில்லை. அங்கு ஒன்பது மணிக்கெல்லாம் கடைகளை சாத்திவிடுவார்கள். உணவகங்களும் மூடியிருந்தன. சாலையோரம் ஒரு தள்ளுவண்டியில் சாப்பாட்டுக்கடை இருந்தது. அருகில் போனேன். அதுவும் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த கடைக்காரர் "டிபன் தீர்ந்திடுச்சு சார்' என்றார். திரும்பி நடந்தேன். "சார்! ஒரு நிமிஷம்" என்று கூப்பிட்டார்.நின்றேன். "நான் சாப்பிடுவதற்காக கொஞ்சம் பரோட்டா வச்சிருக்கேன். வாங்க சாப்பிடலாம்" என்றார். முதலில் நான் வேண்டாம் என்று மறுத்தேன். இல்ல சார் வாங்க என்றார். அதற்குமேல் மறுத்தால் அவரை இழிவுபடுத்துவது போன்றாகிவிடும்.


பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் தந்தார். கைகளை கழுவிக்கொண்டேன். தள்ளு வண்டியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து போட்டு, என்னை உட்காரச் சொன்னார். ஒரு வாழையிலையில் மூன்று பரோட்டா, சிறிது சேர்வா ஊற்றி என்னிடம் தந்தார். மீதமிருந்த இரண்டு பரோட்டாக்களை இலையில் எடுத்துக் கொண்டு நடைபாதையில் உட்கார்ந்தார். ஒரு கருப்பு நாய் ஓடி வந்தது. நம்ம பையன்தான் என்று அதுக்கு பாதி பரோட்டாவை கிழித்துப் போட்டார். அது வாயில் கவ்விக்கொண்டு சிறிது தூரத்தில் சென்று அமர்ந்து நிதானமாக கடித்து சாப்பிட்டது. 


ஆளரவமற்ற நெடுஞ்சாலை‌. அவ்வப்பொழுது சீறிப்பாய்ந்து செல்லும் கனரக வாகனங்கள். சோடியம் விளக்கின் ஆரஞ்சு நிற ஒளி. மிதமான குளிர். அந்த இரவில் நான், அவர், அந்த நாய் மூன்று பேரும் சாப்பிட்டது - கடவுளின் தருணம் எனலாம்.


ஆச்சாரங்கள் - அகந்தையின் வடிவங்கள். 

அகந்தை - அன்பினை அறியாது.


சு.இரவிச்சந்திரன்


Wednesday, April 21, 2021

தந்தைமை – 1



சில நாட்களுக்கு முன்பு:

காலை எட்டரை மணி. என் பையனை பள்ளியில் விடுவதற்காக பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருப்பவர் தன் மகனிடம் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.  சிறிது முரட்டுத் தோற்றம் உடையவர். சிவப்பு ராஜ்கிரண் என்று சொல்லலாம். சில அரசியல் தொடர்புகளும் உண்டு. அவர் தன் மகனிடம் “டேய் இன்னும் டைம் ஆகவில்லை. அவசரப்படாதே. காலேஜுக்கு நிதானமாகப் போகலாம். ஸ்கூட்டரில் மெதுவா போடா. ஹெல்மெட் எடுத்துக்கோ” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். பையன் அவர் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் வேகமாகச் சென்று ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான். அதற்குள் அவன் அம்மா “டேய்! லஞ்ச் பேக்கை விட்டுட்டு போறியேடா” என்று சத்தம் போட்டார். இவர் வீட்டின் உள்ளே ஓடிச்சென்று, லஞ்ச் பேக்கை எடுத்துக்கொண்டு வந்து பையனிடம் தந்தார். அவன் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டு, ஸ்கூட்டரில் வேகமாக பறந்தான். அவருடைய முகம் சட்டென்று மாறியது. மகன் அலட்சியப்படுத்தியன் வலி அதில் தெரிந்தது. அவருக்கு தெரிந்த ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். ஒரு ஆண் எப்போதும் தன் வலியை மற்றவர்கள் முன்பு வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது. வலியை முகத்திலிருந்து உதறி, புன்னகையை அணிந்துக் கொண்டார்.  “பசங்க நம்மள மதிக்க மாட்டேங்கிறாங்க” என்று அவரிடம் சொல்லிச் சிரித்தார்.

என் அப்பாவும் அப்படித்தான் நான் சைக்கிளில் ஸ்கூலுக்கு போகும் போது “பார்த்து போடா” என்று சொல்லுவார். அப்போது அதன் அருமை எனக்கு தெரியவில்லை. இப்போது என் பையன் சைக்கிளில் போகும்போது அதே வார்த்தையை நான் சொல்கிறேன். போனவாரம், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பேக்கரியில், பிரெட் வாங்குவதற்காக என் பையன் சைக்கிளில் கிளம்பிப் போனான். அது பஸ் எல்லாம் வருகின்ற ரோடு. மனம் கேட்கவில்லை.  நான் சட்டை அணிந்து கொண்டு அவன் பின்னாடியே நடந்து போனேன். அவன் பேக்கரியில் ரொட்டி வாங்கி விட்டு, வெளியே சைக்கிளை எடுக்க வந்தான். நான் அவன் அருகில் போனேன். என்னைப் பார்த்து, “நீ ஏம்ப்பா வந்த? என்று கேட்டான். “ச்சும்மாதானான்” என்று சொல்லிவிட்டு, அதிக போக்குவரத்து இல்லாத வேறு ஒரு சந்தின் வழியாக அவனை வீட்டிற்கு போக சொல்லிட்டு, பின்னாலேயே நடந்து வந்தேன்.

மாலை ஏழு மணி. 

பையன் பக்கத்து தெருவில் உள்ள பேட்மிட்டன் கோர்ட்டுக்கு விளையாட போய் இருக்கிறான். பயிற்சி முடித்துவிட்டு எப்போதும் 7 மணிக்கு வீடு திரும்பி விடுவான். தாமதமானால் நானே பேட்மிட்டன் கோர்ட் வரை போய் விடுவேன். நான் தேடிப்போனால் என் பையனுக்கு பிடிக்காது “ஏம்பா! நான் இங்கதானே இருக்கேன். நீ ஏன் வந்த?” என்று கேட்பான். சில சமயம் தாமதமாகும் என்று முன்பே தெரிந்தால், போகும்போது அவன் “இன்னிக்கி டோர்னமெண்ட் ட்ரெய்னிங் இருக்கு. வரத்துக்கு லேட் ஆகும். என்னைத் தேடி அங்க  வந்துடாதே” என்று பொறுப்புடன் சொல்லி விட்டுப் போவான். இன்று ஒன்றும் சொல்லவில்லை. 

மணி 7.10 

மனதில் லேசாக பயம் பரவியது. என் மனைவியும் “என்னப்பா! இன்னும் வரல” என்று கலவரமானாள். ஆண்கள் தங்கள் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. என்ன ஆனாலும் வடிவேலு மாதிரி, முகத்தை கெத்தாக வைத்துக்கொள்ள வேண்டும். 

மணி 7.15 

சரி! போய் பார்த்துவிடலாம் என்று சட்டையை எடுத்து போட்டுக் கொள்ளத் தொடங்கினேன். அதற்குள், மணி அடித்தவாறே பையன் சைக்கிளை ஓட்டிக்கொண்டே, காம்பவுண்டுக்குள் நுழைந்தான். மனம் லேசானது.

புத்தனாவது சுலபம்*. ஆனால் அப்பனாக வாழ்வது கடினம்.

*புத்தனாவது சுலபம் – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையின் தலைப்பு.

Sunday, November 8, 2020

ஓஷோவும், நானும்






எனக்கு பத்து வயது இருக்கும்பொழுது, ராணி வார இதழில், ஓஷோவை பற்றிய கட்டுரை ஒன்றை படித்தேன்.  ஓஷோவும், ஒரு பெண்ணும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் அதில் இருந்தது.  அந்தரங்கப் பகுதிகள் கருப்பு மசி பூசி மறைக்கப்பட்டிருந்தன. ஓஷோ எனக்கு அறிமுகமானது இப்படிதான். 1992ல் ரஜினிகாந்த்தும், வினோத் கன்னாவும் ஒரு விழாவில் ஓஷோவின் புத்தகத்தை வெளியிட்டனர். எனக்கு "ஏன் அந்த செக்ஸ் சாமியாரின் புத்தகத்தை  இவர்கள் வெளியிடுகிறார்கள்" என்று அதிர்ச்சியாக இருந்தது.


1994ல் நடிகரும், ஒழுக்கவாதியான சிவகுமார், ஓஷோ எழுதிய "புல் தானாக வளர்கின்றது" என்ற புத்தகத்தை பற்றி ஆனந்தவிகடனில் எழுதி இருந்தார். அது என்னை மிகவும் ஈர்த்தது. நான் அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தேன். ஓஷோ நான் அதுவரை வைத்திருந்த அத்தனை முட்டாள்தனங்களையும் கருத்துக்களையும் அடித்து உடைத்தார். இப்படி கூட சிந்திக்க முடியுமா? என்று யாருமே சிந்தித்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனைகள் இருந்தன. அவை எனக்குள் பல புதிய கதவுகளைத் திறந்தன.


ஓஷோ புத்தமதத்தின் ஞான மரபான ஜென் தத்துவத்தை பற்றி அதிகம் பேசுகிறார். அவருடைய தத்துவம் மிக எளிமையானது. "இங்கே, இப்பொழுது,(Now and Here) நிகழ்காலத்தில் வாழுங்கள்" என்பதே அது. "உலகத்தில் புனிதமானது என்பது எதுவும் கிடையாது. இழிவானது என்று எதுவும் கிடையாது. நல்லது, கெட்டது எல்லாம் நம் மனதின் தீர்மானங்களே. எதையும், யாரையும் பின்பற்றாதீர்கள். பின்பற்றுபவன் - ஒரு அடிமை. எந்த ஒரு கருத்தியல்குள்ளும் சிக்கிக் கொள்ளாதீர்கள்" என்கிறார்.


  • தியானத்தைப் பற்றி ஓஷோ:

ஒரு செயலை செய்யும் போது, செய்பவன்(Subject), செய்யப்படும் பொருள்(Object) இரண்டுமே இருக்கக் கூடாது. செயல்(Action) மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் தியானம் என்கிறார். ஒரு இசைக்கருவியை நீங்கள் இசைக்கும்போது, இசைப்பவன், இசைக்கருவி இரண்டும் இருக்கக்கூடாது. இசை மட்டுமே இருக்க வேண்டும். இதனை நீங்கள் மைக்கேல் ஜாக்சன் நடனமாடும்போது காணலாம். ஜாக்சன் நடனமாடும்போது, ஆரம்பத்தில் அவர்தான் நடனமாடுவார். சிறிது நேரத்தில் நடனம் அவரை ஆக்கிரமித்து, ஆட்டிவைக்க ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் அங்கு நடனம் மட்டுமே இருக்கும். ஜாக்சன் மறைந்துவிடுவார். இந்த கரைதலையே, ஓஷோ தியானம் என்று சொல்கிறார்.


  • காமத்தை பற்றி ஓஷோ: 

காமத்தை பற்றி ஓஷோ எழுதிய புத்தகங்கள் நான்கு அல்லது ஐந்துதான் இருக்கும் ஆனால் அவரை செக்ஸ் சாமியார் என்று வர்ணித்து பத்திரிகைகள் எழுதின. "காமம் ஒரு குற்றமல்ல. பாவம் அல்ல. ஞானத்தை அடைய அது ஒரு பெரும் தடையுமில்லை. ஞானத்தை அடைய அதுவும் ஒரு வழி" என்று சுட்டிக்காட்டுகிறார். உடல் இன்பத்தை நமது பண்பாடு கொண்டாடியது. அந்நிய மதங்கள்தான் அதனை ஒரு பெரிய பாவம் என்று கூறி கண்டித்தன. "எதை அடக்கி வைக்கின்றோமோ, அது ஒரு காலகட்டத்தில் வெடித்து கிளம்புகிறது" என்று ஓஷோ கூறுகிறார். இன்று நிர்பயா போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு இந்த அடக்குதல்தான் காரணம். "காமத்தின் மூலமாகதான் சிருஷ்டி நடைபெறுகிறது. அது ஒரு பெரிய குற்றச் செயல் அல்ல. காமம் இயல்பான ஒன்று. அதனைக் கடந்துதான் ஞானத்தை அடைய முடியும். மறுத்து அல்ல"  என்று ஓஷோ கூறுகிறார். மேலும் இதைப்பற்றி அறிந்து கொள்ள ஓஷோ எழுதிய "காமத்திலிருந்து கடவுளுக்கு" என்ற நூலைப் படிக்கவும்.


  • போலி சாமியார்கள் பற்றி ஓஷோ:

"நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைகிறாய். நீ பேராசை கொண்டவனாக இருந்தால், ஏமாற்றுக்காரர்களிடம் தஞ்சம் அடைவாய். ஞானத்தேடல் கொண்டவனாய் இருந்தால், உண்மையான ஞானியை சென்றடைவாய். சிஷ்யன் குருவை தேடுவது என்பது அகந்தை. குருவே சிஷ்யனை தேடுகிறார்" என்கிறார்.


  • துறவு பற்றி ஓஷோ:

காவி அணிவதோ, தலையை மழிப்பதோ, முடியை வளர்ப்பதோ, தாடி வளர்ப்பதோ, தலைக்கீழாக நிற்பதோ, துறவு அல்ல. மனதை துறத்தலேயே என்கிறார். 


  • செல்வந்தர்களின் குரு:

அவர் தன்னை செல்வந்தர்களின் குரு என்று அழைத்துக்கொண்டார். ஆன்மீகம் என்பது வறுமையை கொண்டாடுவது அல்ல. தன்னை வருத்திக் கொள்வது அல்ல. வாழ்க்கையை கொண்டாடுவது. ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கையை கொண்டாடுவதே தியானம் என்கிறார். 


ஓஷோவின் நூல்கள், படிப்பதற்கு மட்டுமல்ல பரிசோதித்துப் பார்ப்பதற்கும். ஓஷோ - ஒரு வழிகாட்டி. உங்கள் முன்பு இரண்டு வழிகள்(Choices) உள்ளன. ஒன்று இவனெல்லாம் ஒரு சாமியார் என்று கேலி பேசி, அவர் மீது மலத்தை எறிந்துவிட்டு, தன்னுடைய புத்திசாலித்தனத்தை குறித்து குதூகலம் கொள்வது. இரண்டாவது அவர் காட்டிய வழியில், நம் பயணத்தைத் தொடங்குவது. அது நெடுந்தொலைவு பயணம். பல பிறவிகள் கடந்து செல்லும் பாதை. நாம் ஓஷோவிடம் இருந்துதொடங்குவோம்.



மனிதன் ஒரு வித்தியாசமான பிறவி. இறந்துபோன குருவை கொண்டாடுகிறான். வாழ்கின்ற குருவை கொல்லத் துடிக்கிறான்.
-ஓஷோ

புத்தர் கதை 2



சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தரைப் பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளங்களில் சுற்றி வந்தது, புத்தர் தனது இளம் மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் கைவிட்டுவிட்டு காட்டுக்கு ஓடிப் போன ஒரு கொடுமைக்காரர், கோழை, சுயநலவாதி என்று. நானும் புத்தரைப் பற்றி பல விஷயங்களை படித்து இருக்கின்றேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோணத்தில் நான் யோசிக்கவில்லை. புத்தரின் மனைவி யசோதரையின் துன்பம் மிகக் கொடியது. இருந்தாலும் இவர்கள் புத்தரை ஏன் குற்றவாளியாக ஆக்குகின்றனர். ஞானிகளை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை? ஓஷோ, அதை விளக்குகிறார்.


புத்தர் ஞானத்தை அடைந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்க்கவே விரும்பினார். அதற்கு அவருடைய பிரதம சீடர் ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் புத்தரின் பெரியப்பா மகன். அண்ணன் முறையும் கூட. "நீ துறவி. எப்படி மனைவியை பற்றி நினைக்கலாம்?" என்று கேட்கிறார். ஆனால் புத்தர் "யசோதரை எனக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறாள். அவளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு உள்ளேன். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை அவளுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்றார். தன் மனைவியை காண 12 ஆண்டுகள் கழித்து அரண்மனைக்குப் போகிறார்.


புத்தரை பார்த்தவுடன் அவர் மனைவி அத்தனை ஆண்டுகள் அடக்கி வைத்த கோபத்தையும் துக்கத்தையும் கொட்டி தீர்க்கிறாள். அவர் அமைதியாக கேட்கிறார். "என் மீது உங்களுக்கு அன்பு இல்லையா? என்னையும், குழந்தையையும் தவிக்கவிட்டு பிரிந்து செல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது?" என்று அவள் கேட்கிறாள்.


"என்னிடம் இருந்து தப்பிச் செல்லவே உன்னைப் பிரிந்தேன். உன் மீது உள்ள அன்பினால்தான் உன்னைக் காண மீண்டும் வந்தேன். உன்னை நான் இப்போதும் காதலிக்கிறேன். ஆனால் முன்பிருந்த காதல் வேறு. இப்போதிருக்கும் காதல் வேறு" என்கிறார்.


அவர் மனைவி "நீங்கள் என்னை பிரிந்து சென்றதை பற்றி எனக்கு கோபம் இல்லை. ஏன் என்னிடம் சொல்லாமல் போனீர்கள். அதுதான் எனக்கு மிகுந்த துன்பத்தை தருகிறது. என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? திரும்பி வருவீர்களா என்று தெரியாமல் போர்க்களத்திற்கு உங்களை வழி அனுப்பி வைத்தவள் நான். நீங்கள் சத்தியத்தை தேடி போகிறீர்கள் என்றால் நான் எப்படி தடுப்பேன்?" என்று கேட்கிறாள்.


புத்தர் அதற்கு "என்னை மன்னித்து விடு. நீ தடுக்க மாட்டாய் என்று தெரியும். எனக்குதான் உன்னிடம் விடைபெற்று போகும் தைரியம் இல்லை" என்கிறார்.


யசோதரா "நீங்கள் எங்களைப் பிரிந்து சென்று எதைக்கண்டடைந்தீர்கள்? அதை இங்கேயே நீங்கள் அடைய முடியாதா?" என்று கேட்கிறாள்.


புத்தர் "நான் அப்பொழுது அறியாமையில் இருந்தேன். காட்டில் கண்டடைந்ததை, சந்தடி நிறைந்த சந்தையிலும் அடையலாம். எங்கும் ஞானத்தை அடையலாம். ஏனென்றால் உண்மை எங்கும் நிறைந்துள்ளது. அது அப்போது எனக்கு தெரியாது.


நடந்த தவறுகளை மறந்து விடு. என்னை உற்றுப் பார். எனக்குள் ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. அதனை உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே வந்தேன்" என்கிறார்.  


யசோதரா அவரைப் பார்க்கிறாள். இது பழைய சித்தார்த்தன் அல்ல.  இந்த மனிதருக்குள் ஏதோ ஒன்று மலர்ந்து இருக்கின்றது. அவரை சுற்றி ஒளிவட்டம் வீசுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் அவளின் நெஞ்சில் கனன்ற கனல் அணைந்து மனதில் அமைதி சூழ்கிறது. யசோதரா, புத்தரின் பாதம் பணிகிறாள். புத்தர் அவளுக்கு தீட்சை அளிக்கிறார்.


அவளின் கண்ணீர் பாதங்களில் பட்டு புத்தர் மேலும் புனிதராகிறார்.


புத்தர் கதை 1

 




இறவாத ஒன்றை, எனக்கு போதியுங்கள்

Teach me, which will not die


(எல்லோரும் சிறு வயதில் படித்தக் கதை; ஓஷோ முற்றும் வேறு கோணத்தில் சொல்கிறார். வார்த்தைகள் மட்டும் என்னுடையவை)


ஒரு இளம் தாய். அவளுடைய குழந்தை பாம்பு கடித்து இறந்து விட்டது. சில நாட்களுக்கு முன்புதான் அவளுடைய கணவனும் மரணம் அடைந்தான். அவளின் ஒரே துணை. அக்குழத்தைதான். அந்தப் பெண் கதறி துடிக்கிறாள். கண்டவர் நெஞ்சங்கள் கலங்குகின்றன. அப்போது ஒருவர் இந்த ஊரின் எல்லையில், மரத்தடியில் "ஒரு ஞானி அமர்ந்து இருக்கிறார். அவரிடம் சென்று கேள். அவர் உன் குழந்தையை உயிர்பிழைக்க வைக்கலாம்" என்கிறார். அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.


புத்தர் மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். அமைதியின் உருவம். அந்தப் பெண் அவரின் முன்பு கைகளில் குழந்தையை ஏந்தி, பிழைக்க வைக்குமாறு அழுகிறாள். அந்த பச்சிளம் குழந்தையின் முகத்தை கண்ட புத்தரின் மனம் ஒரு கணம் தடுமாறுகிறது. சட்டென்று புத்தர் மறைந்து சித்தார்த்தன் தோன்றுகிறார். அரண்மனையை விட்டு வெளியேறிய அந்த இரவில், படுக்கையில் தன் மனைவியுடன் உறங்கிக்கொண்டிருந்த தன் மகன் ராகுலனின் பச்சிளம் முகம் அவரின் நினைவுக்கு வந்தது. அவரிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்படுகிறது. 


"அம்மா! உன்னுடைய துயரம் மிகக் கொடியது. யாராலும் தாங்க முடியாதது." என்கிறார்.


அப்பெண் "சுவாமி! தயவுசெய்து என் குழந்தையை பிழைக்க வையுங்கள்"  என்று கெஞ்சுகிறாள்.


புத்தர், கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார். "யார் வீட்டிலாவது ஒரு படி எள் வாங்கி வா. உன் குழந்தையை உயிர் பிழைக்க செய்கிறேன்" என்கிறார். "ஒரு படி எள்தானே. இப்போதே வாங்கி வருகிறேன்" என்று அவள் ஓடத் தயாராகிறாள்.  புத்தர் "ஆனால், ஒரு நிபந்தனை - மரணமே நிகழாத வீட்டில் இருந்து வாங்கி வா" என்று முடிக்கிறார்.


அவள், ஒவ்வொரு வீட்டிலும் போய் இறைஞ்சுகிறாள். எல்லோரும் அவளுக்கு உதவ விரும்புகின்றனர். ஆனால், மரணம் நிகழாத வீடு என்று எதுவும் இல்லை. மாலையில் அவள் புத்தரைத் தேடி வருகிறாள். இப்போது அவள் தெளிந்திருந்தாள். கைகளில் குழந்தை இல்லை. தகனம் செய்திருந்தாள். "சுவாமி, மரணம் நிகழாத வீடு எதுவும் இல்லை. பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறப்பர். மரணம் தவிர்க்க இயலாதது. இயற்கையானது என்பதை அறிந்துக் கொண்டேன். அதனால், என்றும் இறவாத ஒன்றை எனக்கு போதியுங்கள் (Teach me which will not die)" என்று அவர் பாதம் பணிந்து சிஷ்யை ஆகிறாள்.


இத்துடன் ஓஷோ முடித்திருந்தால், நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் தொடர்கிறார் "அந்தப் பெண் இயேசுவிடம் சென்றிருந்தால் நிச்சயம் அவர் குழந்தையை உயிர்த்தெழ செய்திருப்பார். அது அவருடைய அணுகுமுறை. இருவரும் ஞானிகள்தான். ஆனால் புத்தர் வேறு, இயேசு வேறு" என்று முடிக்கிறார்.


புத்தர் ஏன் மரணம் இயற்கையானது என்று சொன்னார். இயேசு ஏன்  மரித்தவரை உயிர்த்தெழச் செய்தார். இது நமது சிந்தனைக்கு.


சு.இரவிச்சந்திரன்


Saturday, August 1, 2020

Daily Mystic Quote - Aug 1, 2020

If you gain enough mastery over yourself and determine the nature of your experience of life, you can also largely determine when and how you shall die.

Quotes about Life - Sadhguru looks at how life and death are essentially a play of time, information and energy, and how we can become absolutely free if we conduct these three consciously.

Friday, July 31, 2020

Daily Mystic Quote - Jul 31, 2020

Wherever you are, whatever you do – This Is The Time for you to rise and show what you are made of.

Quotes about life